இளையான்குடி: சாலைக்கிராமம் அருகே பைரவருக்கு 55 கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே வடக்கு சாலைக்கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பைரவர் கோயிலில் நேற்று பெரும்பூசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருப்பசாமி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நந்திதேவர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும், உற்சவர் லிங்கேஸ்வரர் மற்றும் மூலவர் பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பைரவருக்கு 55 கிடாக்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் அன்னதானம் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கமகமக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், துகவூர், சமுத்திரம், புதுக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.